டைம் மிஷின்!!!!!

Thursday, December 27, 2012

”டொய்ய்ங்ங்ங்ங்ங்ங்” மாடியில் என் அறையில் தான் இப்படி ஒரு பயங்கர சத்தம். முதலில் கேட்பவர்களுக்கு தான் அது பயங்கர சத்தம், பயமுறுத்தும் சத்தம். எனக்கு அது வழக்கமான, பழகிப்போன சத்தம். “ஹிம் நேத்த விட இன்னைக்கு 42 டெசிபெல் கம்மி” என்று இந்த சத்தத்தை அளவெடுத்துவிட்டு அடுத்த பெரிய சத்தத்திற்கு என்னை தயார் செய்துகொண்டிருப்பேன்.. கீழே இருந்து அம்மாவின் குரல் அந்த சத்தத்தை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவது போல் வரும்,”டேய் ஏன்டா இப்படி நெலையில நிக்காம ஆடித்தொலையுற?”. நான் அந்த வார்த்தையையும் மைண்டில் என் ஆராய்ச்சியில் ஏற்றி யோசித்துக்கொண்டிருப்பேன், “நிலையில் நிற்காமல் ஒரு பொருளால் ஆட முடியுமா? அச்சு வேண்டுமே? அச்சு இல்லாமல் அந்தக்காலத்தில் ஏதோ கோயிலில் கூட சிவலிங்கம் இருந்ததாக் சொல்வார்களே?!” என்று. என் கவனம் மீண்டும் கலைக்கப்பட்டது, "ஒவ்வொரு வீட்லயும் பிள்ளைக படிச்சி வேலைக்கி போயி பெத்த தாயி தகப்பனுக்கு சம்பாதிச்சி கொடுக்கும்ணு தான் கேள்விப்பட்டிருக்கு. ஆனா எனக்கு வாய்ச்சது, இருக்குற சொத்தையும் இப்படி வெடிக்க வச்சே கரைச்சிரும் போல” என்று சலித்துக்கொள்வார். அவருக்கு தன் கணவன், அதான் என் அப்பா, அவரின் சொந்தங்களோடு சண்டையிட்டு வாங்கிய இந்த வீடு என் “டொய்ய்ய்ங்ங்ங்”கினால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம்.. ஆனால் எனக்கு இந்த சத்தங்கள் தான் வாழ்க்கை.



அவனவன் பி.ஈ. முடிச்சிட்டு எதாவது ஐ.டி. கம்பெனில ஷிஃப்ட் முறையில ஒக்காந்து கோட் எழுதிக்கிட்டு, 2 வருஷத்துல வீடு, 4 வருஷத்துல கல்யாணம், அஞ்சு வருஷத்துல குட்டி போடுறதுனு இருக்கும் போது நான் மட்டும் இப்படி வீட்டில், சம்பாதிக்காமல், ஒழுங்காக சாப்பிடாமல், குளிக்காமல், இரவு பகல் தெரியாமல், பைத்தியக்காரன் போல், ஒரே அறையில் அதுவும் திடீர் திடீரென்று ‘டொய்ங்’ சவுண்டெல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தால் எந்த அம்மாவுக்கும் கோவம் வரத்தான் செய்யும். அதுவும் ஒரு முறை, ’பையனுக்கு கால்கட்டு போட்டால் சரியாகிவிடும்’ என்று என் அப்பாவை எப்படியோ சம்மதிக்க வைத்து யாரோ ஒரு தூரத்து உறவினர் பொண்ணை குடும்பத்தோடு வரவழைத்து அவர்கள் என்னை பார்க்க என் அறைக்கு வந்ததார்கள். நான் அவர்கள் வருவதை கவனிக்காமல், எதையோ எதோடோ கலந்து கொண்டிருந்தேன். எனக்கு அதின் பெயர்கள் எல்லாம் தெரியாது. எல்லாமே ட்ரெயல் & எரரில் தான் செய்து கொண்டிருப்பேன். ஒன்றும் ஆகவில்லை என்றால் சக்ஸஸ். “டொய்ங்” என்று வெடித்தால் இன்னொன்றை கலக்க எடுத்துக்கொள்வேன், இதை ஃபெயிலியர் என்று நோட் பண்ணிக்கொண்டு. அம்மா, “டேய் தம்பி இங்க பாரு தீபா வந்திருக்கா” என்றார். நான் மெதுவாக அவளை பார்த்தேன். இவ எங்க சொந்தக்காரி தானா என ஒரு சந்தேகம். எங்க சொந்தக்காரய்ங்க மேலயே டவுட்டு வந்தது, “எவனோ எங்கேயோ தப்பு பண்ணிருக்காய்ங்க, நம்ம சொந்தத்துல ஏது இவ்வளவு அழகான பொண்ணு?” என்று. ஆஆவென்று வாயை திறந்து கொண்டே கையில் கலந்துகொண்டிருப்பதின் அளவை கவனிக்காமல் ஊற்றிக்கொண்டே இருந்திருக்கிறேன். காதல் என்பது கூட ஒரு ரசாயன மாற்றம் தானே?! ஒரு சத்தம், நான் காற்றில் பறப்பது போல் ஒரு சுகமான அனுபவம், சிகப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த ஒரு ஒளி வெள்ளம். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வில் சிம்பு சொல்வாரே, ’காதல்னா நம்மள போட்டு தாக்கணும், அப்படியே தலைகீழா புரட்டி போடணும்’னு அது மாதிரி நான் தலைகீழாக கிடந்தேன். 

 தீயணைப்பு வீரர்கள் வந்து என் மூஞ்சியில் தண்ணீரை அடித்து வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து போட்ட போது தான் உணர்வு வந்தது. மெதுவாக எழுந்து வீட்டை பார்த்தேன். எங்கள் வீடு மட்டும் நனைந்திருந்தது. “எம்மா நம்ம வீட்ல மட்டுமா மழ பேய்ஞ்சது?” என்று மெதுவாக என் அம்மாவிடம் திரும்பி கேட்கும் போது தான் எனக்கே உஷார் வந்தது, என் காதலின் கெமிஸ்ட்ரி ஓவராகி வீட்டையே கொழுத்தி விட்டது என்று. அப்போது ஓடிய உறவினர்கள் தான், இப்போது வரை ஒரு பய எங்க வீட்டுக்கு வருவதில்லை.. பல நாட்களுக்கு பிறகு என் அம்மாவும் அப்பாவும் ரவுண்டு கட்டி என்னை அடித்தது அப்போது தான். அதில் இருந்து ‘இவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் நம்மை கொலை கேஸில் சிக்க வைத்து விடுவான் என்று தீபா கீபா என்று எவளையும் அழைத்து வருவதில்லை. என் கெமிஸ்ட்ரியும் லேசான வெடிப்புகளுடன் மட்டும் நடந்துகொண்டிருந்தது.



இப்படி அடிக்கடி என் வீட்டில் தீபாவளி கொண்டாடுவதும் சத்தம் போட்டு வேட்டு வெடிப்பதும் என் பொழுதுபோக்கு ஒன்றும் இல்லை. நான் ஒரு வின்னான, இல்ல இல்ல விக்யான ச்சே இந்த தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு? நான் ஒரு சயிண்டிஃபிக் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். சினிமா ஹீரோ பாணியில் சொல்வதானால் இது என் லட்சியம், வெறி. என் பாணியில் சொல்வதானால் நான் கண்ணை திறந்து காணும் கனவை நிஜமாக்கும் ஒரு வழி. நான் இப்போது ஒரு டைம் மிஷினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். யோசித்துப்பாருங்கள், வரலாற்றை படிக்கும் போது நம் தலையை சுற்றி நாமாக கற்பனை செய்த பிம்பங்கள், பிரமாண்டங்கள், பழைய வாழ்க்கை முறைகள் இதையெல்லாம் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? இதை கேட்கும் போது உங்களுக்கு நக்கலாக நம்ப முடியாமல் இருந்தால், இப்போதே ஓடிவிடுங்கள் என் அறையை சாத்திவிட்டு. பின் நாளை நான் சாதித்தவுடன் வந்து, “சுரேஷு என்ன கிளியோபாட்ரா கிட்ட கூட்டிட்டு போடா’, ‘தம்பி மகாபாரத போர் எப்படி நடந்துச்சின்னு பாக்கணும், தலைவரு பெங்களூர்ல கண்டக்டரா இருந்தத காமிப்பா”னு எவனாவது கேட்டீங்கன்னே நாட் அலவ்டு, இப்பவே சொல்லிட்டேன் ஆமா..


எனக்கு இப்போது வயது 32 ஆகிறது. என்னது? 42 போல் இருக்கிறதா? ஹலோ நான் ஹேர் கட், ஷேவ் எல்லாம் பண்ணிட்டு வந்து நின்னா இன்னும் ஏழு குறைந்து 25 வயது போல் இருப்பேன். என் கூட படிச்சவன் எல்லாத்துக்கும் கல்யாணம் ஆகிருச்சி. சில அவசரக்குடுக்கைகள் இப்போது ரேன்க் கார்டுகளில் கையெழுத்து போடும் அளவிற்கு  கூட இருக்கிறார்கள். எனக்கு அவர்களையெல்லாம் பார்த்தால் ஏதோ ரோட்டில் போகும் எருமையை பார்ப்பது போல் இருக்கும். இலக்கு இல்லாமல் பணத்தின் பின் ஓடும் வாழ்க்கை. ஏதோ கடமைக்கு அறிவியலை மூளையில் ஜெராக்ஸ் எடுத்து அதை பரிட்சை பேப்பரில் வாந்தி எடுத்து அதோடு மறந்துவிட்டு, சில பல முறை மனப்பாடம் செய்த “ya tell me about yourself" என்னும் இன்டர்வியூ கேள்விக்கான பதிலை மூன்றாம் ஆண்டு இறுதி முதல் நான்காம் ஆண்டு முடிக்கும் வரை ஒவ்வொரு மத்திய வயது வெள்ளைத்தோல் பெண்ணிடமும் கூறி தன்னை அதிகமாக பேரம் பேசும் கம்பெனியில் வேலைக்கு போய் கோட் எழுதி, உடன் வேலை செய்யும் வேறு சாதி பொண்ணை காதலித்து பெற்றோர்களின் வயிற்றெரிச்சலில் ஹோமம் வளர்த்து மணமுடித்து, வருசா வருசம் அப்ரைசல் வரும் போது புலம்பி, அப்ரைசல் முடிந்ததும் வேறு கம்பெனிக்கு ஓடி, சம்பள எண்களின் உயர்வை வைத்து வாழ்வின் சந்தோஷத்தை அளவிடும் அவர்களுக்கும், அதிகான வைக்கோலை சுற்றி சுற்றி வரும் எருமைக்கும் எனக்கு சத்தியமாக வித்தியாசம் தெரிவதில்லை.



இன்னும் சிலர் இருக்கிறார்கள், வேலைக்கு போனவுடன் நண்பர்கள் மூலம் தன் குடும்பத்துக்கு தனது கல்யாண ஆசைகளை மறைமுகமாக சொல்ல வைப்பார்கள். அவைங்களும் அவன் வீட்டுக்கு போகும் போதெல்லாம், “ஹ்ம் வேல கெடச்சிருச்சி, அடுத்து எப்ப கல்யாணம்?” என்று கேட்பான். மறு நாள் இவன் அவன் வீட்டில் இதே கேள்வியை கேட்க வேண்டும் என்கிற டீலிங்கில் இந்த கருமம் ஓடும். இவைங்கல்லாம் என்னத்த சாதிச்சிட்டோம்னு கல்யாணம் பண்ணுறாய்ங்க? தெருத்தெருவா போய் பழைய பாத்திரத்துக்கு துணி விக்குறவன் மாதிரி சிம் கார்டு, சிமிண்ட்டு, இன்சூரன்ஸுனு விக்குறாய்ங்க.. இல்லேனா பேங்க்ல உக்காந்து சொத் சொத்னு சீல் குத்துறாய்ங்க. அதுவும் இல்லனா அவங்க அப்பா சம்பாதிச்சி வச்சிருக்குற கடையில ஒக்காந்து ரோட்டுல போற வர வண்டிய எண்ணிக்கிட்டு இருக்குற கேப்புல வியாபாரம் பண்ணுவாய்ங்க.. அதுவும் இல்லேனா இருக்கவே இருக்கு, ஊருக்கு ரெண்டு சாஃப்ட்வேர் கம்பெனி. கோட் எழுதுறேன், டெஸ்டிங் பண்ணுறேன்னு காலத்த ஓட்டிருவாய்ங்க. இன்னும் கொஞ்ச பேரும் இருக்காய்ங்க.. நம்ம கூட அவைங்க என்ன லட்சணத்துல படிச்சாய்ங்கனு தெரியும். ஆனா இப்ப எதாவது ஸ்கூல்லயோ காலேஜ்லயோ பாடம் நடத்திக்கிட்டு அவைங்கள மாதிரியே ஒன்னத்துக்கும் உருப்படாத துணி விப்பவன், பேங்க்ல சீல் குத்துறவன், கம்ப்யூட்டர் முன்னாடி தவம் இருப்பவன்னு உருவாக்கி தருவாய்ங்க. ச்சே, படிப்போட பர்பஸே இங்க இல்ல. இந்தியால வருஷத்துக்கு வெறும் 3000பேர் தான் பேடண்ட்க்கு அப்ளை பண்ணுறாய்ங்களாம். அதுவே ஜப்பான், சீனால லட்சக்கணக்குல இருக்கு.. வாழ்க்கைனா ஒரு லட்சியம் வேணும்.



சின்ன வயதில் வரலாற்று புத்தகங்களை படித்த போது வரலாற்றின் மீது காதலும், பத்தாம் வகுப்பு படித்த போது ரோசி டீச்சர் அழகாக இருந்ததால் சயின்ஸ் மீது  காதலும் வந்தன. அந்த இரண்டும் சேர்ந்து இதோ என்னை இந்த உலகின் முக்கிய கண்டுபிடிப்பான டைம் மிஷினை கண்டுபிடிப்பதை நோக்கி கொண்டுவந்திருக்கின்றன. இது வரை என் ஆராய்ச்சி 22 முறை தோற்றுள்ளது. அது இருபத்தி மூன்றாவது முறையாக நடக்கக்கூடாது என்று தான் இந்த முறை மிகவும் கவனமாக இருக்கிறேன். டைம் மிஷின் என்பதை பற்றி உங்களுக்கு கொஞ்சமாவது அறிவியல் பூர்வமாக சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியும். அய்யோ ஓடிவிடாதீர்கள். மிகவும் எளிதாகவே சொல்கிறேன். அதாவது நாம் காலத்தை கடக்க 4D வேண்டும். 4D இருந்தால் காலத்தை கடந்து நாம் நினைக்கும் காலத்திற்கு சென்றுவிடலாம். நீங்கள் 3D கேள்வி பட்டிருப்பீர்கள். நீளம், அகலம், உயரம் இது தான் 3D. இதில் நான்காவதாக ஒன்றை அதாவது காலம் என்னும் ஒன்றை இணைத்தால் கிடைப்பது 4D. நீளம், உயரம், அகலம், காலம் இந்த மூன்றையும் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால் நாம் காலத்தை மீறலாம். அப்படி காலத்தை மீற நாம் இன்னொன்றை செய்தாக வேண்டும். அதாவது ஒளியின் வேகத்தை விட அதிகமாக சென்றால் காலத்தை கடக்கலாம். இப்போது என் இலக்கு ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு வஸ்துவை கண்டுபிடிப்பதில் தான் இருக்கிறது. என்னது ஒளியா? அது நொடிக்கு மூனு லட்சம் கிலோமீட்டர் போயிரும். ஆமா அதை விட வேகமா போற ஒன்னத்தான் கண்டுபிடிக்கணும்.

  

இப்படித்தான் ஒரு முறை என் அப்பாவிற்கு கம்பெனியில் கொடுத்த காரில் அவர் அசந்து தூங்கும் ஒரு உச்சி வெயில் ஞாயிற்றுக்கிழமையில் அதை முயற்சி செய்தேன். கொஞ்சம் (ரொம்பவே) பயமாக இருந்ததால் இடது பேண்ட் பாக்கெட்டில் பிள்ளையார் போட்டோவும், வலது பேண்ட் பாக்கெட்டில் ஏசுநாதர் படமும் (ரோசி மிஸ் மீது கொண்ட பாசத்தால்), வைத்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தேன். தேதி, நேரம், இடம் என்று எதையும் நான் ஃபீட் செய்யும் முன்னரே லூஸ் மோஷன் போல் அவிழ்ந்து ஓடியது கார். டம் எனும் சத்தத்துடன் ஒரு இடத்தில் நின்றது. கிட்டத்தட்ட 50 வருடங்கள் பின்னோக்கி வந்துவிட்டது போல் தெரிந்தது. எங்கும் ஒரே குப்பை மயம். ஒரு நாய் “யார்டா இவன் புதுசாக” என்பது போல் குரைத்தது. ’பார்ரா நம்ம தெரு நாய் மணி மாதிரியே அந்தக்காலத்துல கூட ஒரு நாய் இருந்திருக்கே’ என வியந்து கொண்டே என் மீது இருக்கும் குப்பையை எல்லாம் எடுத்து விட்டு பார்த்தால், அட எங்க தெருவை கூட நான் தாண்டவில்லை. அது எனது 19வது தோல்வி. தவறை குறித்துக்கொண்டேன் “நம்மூர் சாலைகளில் காலத்தை கடக்க முடியாது” என்று. அரை தூக்கத்தில் அலறி அடித்து ஓடி வந்த என் அப்பா காரையே வெரித்து பார்த்துக்கொண்டிருந்தார். அன்று முதல் இன்று வரை என் அப்பாவை பார்க்கும் போதெல்லாம் அவரின் அந்த வெரித்த பார்வை தான் ஞாபகம் வரும் எனக்கு. ரொம்ப காமெடியாக இருக்கும் அவரின் அந்த பார்வையைநினைக்கும் போது. இன்று வரை அவர் சம்பளத்தில் அந்த காருக்கான பணம் பிடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அறிகிறேன். அதிலிருந்து அவர் டூவீலரை கூட விற்றுவிட்டு பஸ்ஸில் போய்விட்டு பஸ்ஸிலேயே வந்துவிடுகிறார். இதனால் கூட என் ஆராய்ச்சியில் சிறு தொய்வு.


இப்படி என் ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் ஒரு கதை உண்டு. ஆனால் ஒரு வெற்றியை கொடுத்துவிட்டால் என் தோல்விகள் எல்லாம் வெற்றிக்கதைகள் ஆகிவிடும். அந்த ஒரே ஒரு வெற்றிக்காத்தான் நான் வீட்டில் ஏச்சையும் பேச்சையும் கேட்டுக்கொண்டு ஆரய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். நண்பர்கள் என்னும் பெயரில் வரும் சில துரோகிகள் தான் என் தன்னம்பிக்கையை அடிக்கடி குழைப்பவர்கள். தங்கள் பெண் தோழியரோடு எடுத்த படங்களை எல்லாம் காமித்து வெறி ஏற்றுவார்கள். பெண் தோழி இல்லாததை ஏதோ ஆண்மை இல்லாதது போல் பேசிக்கொண்டிருப்பார்கள். ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாததெற்கெல்லாம் வேறு நக்கல். பேசாமல் எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டோடு சென்னைக்கு பஸ் ஏறிவிடலாமா என்று யோசிப்பேன். ஆனால் நான் 22 முறை தோற்றது இதற்காகவா என்னும் சீரிய எண்ணம் என்னை மீண்டும் டைம் மிஷினை நோக்கி இழுத்துவிடும். நாளை இவர்களே வந்து கேட்பார்கள், “மாப்ள டென்த்ல நான் லவ் லெட்டர் குடுக்கும் போது வாத்தியார்ட்ட மாட்டிட்டேன்டா. இப்ப வரைக்கும் என் தம்பி அத சொல்லி கிண்டலடிக்கிறான், குடும்பத்துல மானம் போகுது. கொஞ்சம் உன் மிஷின்ல போயி கரெக்ட்டா லெட்டர குடுத்துட்டு வந்துரலாம்டா”னு.. அப்ப இருக்கு இவைங்களுக்கெல்லாம் வேடிக்கை..


இப்படியே போய்க்கொண்டிருந்த என் ஆராய்ச்சி வாழ்க்கையில் இன்னும் பல சின்ன சின்ன ட்ரெயல் எரர்களை முடித்து, இன்று நான் இருபத்தி மூன்றாவது முறையாக முயலப்போகிறேன். கிண்டலடித்த நண்பர்களும் உறவினர்களும், ஓடிப்போன தீபாவும் ஞாபகம் வந்து போனார்கள். ’எல்லாருக்கும் இருக்குடீ வேட்டு’ என்று நினைத்துக்கொண்டு, பிள்ளையாரும் ஜீஸசும் ராசி இல்லாததால் இந்த முறை மேரி மாதாவும், முருகப்பெருமானும் என் பேண்ட் பையில் அமர்ந்து கொண்டார்கள். கார் போன்ற மாடல் நம் சாலைக்கு ஒர்க் அவுட் ஆகாது என்பது எனது 19வது தோல்வியின் ரிசல்ட் என்பதால் இந்த முறை ஆகாய மார்க்கமாக செல்ல வடிவமைத்திருந்தேன். அங்கு தான் குப்பைத்தொட்டி, லைட் போஸ்ட், தெரு நாய் என எதுவும் இருக்காது. எதுவும் பிரச்சனை வந்தாலும், குதித்து தப்பிக்க என் போர்வையையும், அம்மா வடகம் காயப்போடும் பெரிய பாலீதீன் கவரையும் ஒரு பாராசூட் போல செய்துகொண்டேன்.வீட்டின் ஜன்னல் வழியாக பறப்பத்தற்கு எல்லாம் தயாராகி விட்டது. எல்லாம் தயார். என் கணிப்பு படி எல்லாம் இந்த முறை சரி. ஒரு சிறு தவறு கூட நேராது. இருந்தாலும் எந்திரத்தை கிளப்பாமல் காத்திருந்தேன், மணி பன்னிரெண்டை தாண்டட்டும் என்று. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. பத்து டூ பன்னெண்டு ராகு காலம் அதான். மணி பன்னிரெண்டு ஆகியது. அம்மா அப்பாவை வழக்கம் போல் நினைத்துக்கொண்டு என் எந்திரத்தை கிளப்பினேன்.


வேகமெடுத்து கிளம்பியது. ஜன்னலை கொஞ்சம் பலமாகவே பக்கவாட்டில் உடைத்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் உடைந்த ஜன்னலின் சத்தத்தை விட இந்த வேகத்தில் செல்லும் போது கூட என் அம்மாவின் சத்தம் தான் பெரியதாக கேட்டது. சரி, இனி எப்போது அவரை பார்க்கப்போகிறோம்? கத்தினால் கத்தட்டும் என நினைத்துக்கொண்டே என் எந்திரத்தில் "11.09.1921 A.D, 1a.m., Triplicane, Chennai" என்று ஃபீட் செய்தேன். எழுத்துக்களால் ரத்தத்தில் அக்னியை பாய்ச்சி யாரையும் கிளர்ந்தெழ செய்ய முடியும் என்று உணர்த்திய புரட்சிமிகு கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் பதினைந்தாவது ஆளாக பங்கெடுத்துக்கொள்ள ஆசை எனக்கு, அதனால் தான் அந்த தேதி. வண்டியும் நன்றாக மேலெழும்பியது. எனக்கு சிவாஜி, ஷாயாஜி ஷிண்டே தேவையில்லாமல் விஜய் என்று பாரதியார் வேடத்தில் நடித்த நடிகர்கள் முகம் எல்லாம் ஞாபகம் வந்து போனது. வயிற்றின் அடியில் சின்ன சூடு, ஒரு வித த்ரில்லிங் கலந்த மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு எல்லாம். தீடீரென்று பார்த்தால் என் எந்திரம் மட்டும் தனியாக பறக்கிறது என் கண் முன்னே. சில மீட்டர் தூரத்துக்கு அப்பால் அது தெருவின் முக்கு பிள்ளையார் கோவிலின் முன் விழுந்தது. இந்த முறை தன் படம் கொண்டு போகாத ஆத்திரத்தில் பிள்ளையார் தான் இந்த சதியை செய்திருக்க வேண்டும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக தெரிந்தது. நான் ஏதோ கேபிள் வயரிலோ டெலிஃபோன் வயரிலோ தொங்கிக்கொண்டிருந்தேன். கரெண்ட் வயராக கூட இருக்கலாம். தெரு ஜனம் எல்லாம் ஏணி, ஸ்டூல், மேஜை என்று என்னென்னவோ போட்டு என்னை கீழே இறக்கியது. 23வது குறிப்பை பதிந்து கொண்டேன் “டேக் ஆஃப் ஆகும் போது வயரை ஞாபகம் வைக்கவும், மறக்காமல் பிள்ளையார் ஃபோட்டோவை பாக்கெட்டில் வைக்கவும்” என்று. 

அம்மா வழக்கம் போல் “ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைக....” என்று தன் பாடலை நடு ரோட்டில் பாட ஆரம்பித்துவிட்டார். தெரு மக்களும் என்னை நக்கலாக அரை லூசு போல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு கடுப்பாக இருந்தது. ஒருவன் அறிவியல் சாதனை செய்து முன்னேறலாம் என்றால் அவனை டீ-மோடிவேட் செய்யத்தான் எத்தனை ஆட்கள்? ச்செய் என்று நொந்துகொண்டேன். லேசாக வயிறு பசித்தது. நேற்று மதியம் சாப்பிட்டது என்று நினைக்கிறேன். 24வது முறைக்கு யோசிக்கும் முன் லேசாக சாப்பிட்டு விட்டு வரலாம் என்று நினைத்து அருகில் இருக்கும் ரோட்டோர மெஸ்ஸுக்கு சென்றேன்.

அது 4பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய மிகச்சிறிய கடை. மாலை மூன்று மணி வரை கூட சூடாக இட்லியும், பொங்கலும், பூரியும் கிடைக்கும் கடை. அதுவுமில்லாமல் நான் சாப்பிடும் சாப்பாட்டிற்கு என்னிடம் காசு கேட்காமல் என் அப்பா வேலையில் இருந்து வரும் போது நேரடியாக அவரிடமே கேட்டு வாங்கி, எனக்கு பிரச்சனை கொடுக்காத நல்ல கடை. அங்கு போய் அமர்ந்தேன்.



“அண்ணே எல போடுங்க” - இலையில் தண்ணீரை தெளித்து துடைத்துக்கொண்டே எனக்கு எதிரில் இருக்கும் அந்த ஆளை பார்த்தேன். இருக்காரா இல்லையா என்று தெரியாத அளவிற்கு ஆள் என்னை விட கறுப்பு. என்னை விட கறுப்பாக இன்னொருவர் இருக்கிறார் என்று தெரிந்த போதே மனதிற்குள் 23வது தோல்வியை தாண்டியும் ஒரு சிறு சந்தோஷம் வந்தது. அந்த ஆளுக்கு ஒரு ஐம்பத்தைந்து அறுபது வயது இருக்கும். நான் ரெண்டு இட்லி சொன்னேன். என்னை பார்த்து சிரித்துக்கொண்டே அந்த ஆளும் “எனக்கு ரெண்டு இட்லி” என்றார். 

“கார சட்னி வேண்டாம், தேங்கா சட்னி மட்டும் போதும்” என்று கடை பையனிடம் சொன்னேன். அந்த கிழமும் அதையே சொன்னது. எனக்கு எரிச்சலாக வந்தது. நிமிர்ந்து அந்த ஆள் முகத்தை பார்த்தேன். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. பிடரி வரை தலை சொட்டை. இடது பக்கம் காது அருகில் முடியை நீளமாக வளர்த்து அதை வலது பக்க காது வரை கவனமாக இழுத்து தன் சொட்டையை அழகாக மறைத்திருந்தார். அடிக்கடி தன் சொட்டை சரியாக மறைக்க பட்டிருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டிருந்தார். தலைக்கும் சேர்த்து மூக்கின் கீழ் மீசை என்னும் பெயரில் ஒரு வெண்புதர் வளர்ந்திருந்தது. முழுதும் நரைத்து அங்கங்கு பாக்கி கறுப்பு நிறத்தை மிச்சம் வைத்திருக்கும் தாடி. அந்த புதர் மண்டிய வாய்க்குள் இட்லி செல்வதை பார்க்கும் போதே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. சுத்தமாக அந்த ஆளை எனக்கு பார்க்கவே பிடிக்கவில்லை.

“அண்ணே ரெண்டு எம்டி பூரி” - எனக்கு உருளைக்கிழங்கு ஆகாது. அந்த கிழமும் அதை தான் சொல்லும் என தெரியும். அதே போல் நான் சொல்லி முடித்த உடனே, “அண்ணே எனக்கும்” என்றது. ‘கொழுப்ப பாத்திய கெழத்துக்கு? அது வயசுக்கு நம்ம கடக்கார பாஸ்கரு அண்ணனாம்’ என நினைத்துக்கொண்டேன். எனக்கு திடீர் என்று மூளையில் ஒரு சிறு ஷாக். டக்கென்று நிமிர்ந்து அந்த கிழத்தை பார்த்தேன். அவர், அவர் என்ன அவர்? அவன் மிகவும் ஆர்வமாக தேங்காய் சட்னியில் நீச்சல் அடித்து பூரியை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

“எத்தனாவது அட்டெம்ப்ட்ல நடந்துச்சிடா?” அவனை, இல்லை இல்லை என்னை பார்த்து கேட்டேன்.

“என்னது டாவா? டேய் தம்பி நான் ஒனக்கு 25 வருஷம் பின்னாடி இருந்து வாரேன். மரியாதையா பேசு” கர்வத்தில் சிரித்துக்கொண்டே ஏதோ எனக்கு 25 வருஷத்துக்கு முன் பிறந்தவன் போல் தெனாவட்டாக பேசினான்.

“சரி எத்தன அட்டெம்ப்ட்டுக்கு பிறகு கண்டுபுடிச்சீங்க சார்? சொல்லித்தொலைங்க” என்றேன். ஏனென்றால் எனக்கு அவனை, ச்சீ, என்னை அப்படி பார்க்கும் போது 23, 24 என்று என் அட்டெம்ப்ட்டுகள் அறுபது எழுபதையெல்லாம் என்றோ கடந்து நூறை நெருங்கியிருக்கும் என பயந்தேன்.

“ஹா ஹா ஜஸ்ட் ஹண்ட்ரடு அண்ட் டுவென்டி ஃபோர்த் அட்டெம்ப்ட் மை டியர் ஃப்ரண்ட்” என்றான் பெருமையாக. ‘என்னது இன்னும் நூறு முயற்சிகளா?’ வெளிறிப்போய்விட்டது எனக்கு.

“கண்டுபிடிச்சி முடிச்சதும், என்னமோ தெரில வயரில் தொங்கிய பிள்ளையாரின் சாபமான இந்த 24வது அட்டெம்ப்ட் தான் ஞாபகம் வந்தது. பசி வேற அதான் நேரா இங்க உன்ன பாக்க வந்துட்டேன்”. எனக்கு அவன் அக்கறையோடு வந்திருக்கிறானா, அல்லது என்னை நக்கல் செய்ய வருங்காலத்தில் இருந்து இப்படி புறப்பட்டு வந்திருக்கிறானா என்று தெரியவில்லை. என்னை பற்றி எனக்கு தெரியும். நானே நினைத்திருக்கிறேன், இதை கண்டுபிடித்ததும் நான் தோல்வியுற்ற ஒவ்வொரு நாளிலும் சென்று அந்த தோற்றுப்போன சுரேஷ்களை பார்த்து சிரிக்க வேண்டும் என்று. ஆனால் ஒரு ஜெயித்த கிழட்டு சுரேஷ் என்னை பார்க்க வருவான் என்று நான் ஒரு போதும் யோசித்துப்பார்க்கவில்லை.

“சரி கல்யாணம் ஆகிருச்சா?”

“என்னது கல்யாணமா? ஹலோ நீயா இப்படி பேசுற? ஒரு கொள்கையில் ஜெயிச்சதுக்கு பிறகு தானே கல்யாணம் பணம் எல்லாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்? இனிமேல் தான் மேட்ரிமோனில அப்ளை பண்ணனும்!!”

“டேய் அப்ப நீ இந்த 60 வயசுல இனிமேல் தான் கல்யாணம் பண்ணனுமா?”

“ஹா ஹா நான் மட்டும் இல்ல தம்பி, நீயும் தான் 60 வயசுல கல்யாணம் பண்ணுவ” என்னை பார்த்து சொல்லி சிரித்து கண்ணடித்தான். 

ஒரு கிழவன், அது நானாகவே இருந்தாலும் என்னை கிண்டலடிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுவும் இப்படி அசிங்கமாக சாப்பிட்டுக்கொண்டு, அறுபது வயதில் தான் மேட்ரிமோனிக்கு அப்ளை பண்ணுவோம் என்று நினைக்கும் போதே எனக்கு திக்கென்று இருந்தது. என்ன தான் கொள்கை, அது இதுவென்று பேசினாலும், 32 வயதில் தெனாவட்டாக திரிந்தாலும், அவனின் வயதில் ஒருவனுக்கு ஒரு துணை இல்லை, அது எனக்கும் நேரும் என்றும் தெரியும் போதே நான் தின்ற பூரி வயிற்றுக்குள் இறங்காமல் நெஞ்சிலேயே நின்று கொண்டது. அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நான் அவன் எதிர்பார்க்காத போது திடு திடுவென்று ஓட ஆரம்பித்தேன் அந்த பிள்ளையார் கோவிலை நோக்கி. என் மிஷினில் இருக்கும் டீசலை எடுத்து அதை கொழுத்திவிட்டேன். “டேய் டேய் எரிக்காதடா” என்று அவன் ஓடி வர முயன்றான். வேகமாக அவனால் நடக்க கூட முடியவில்லை. “போடா வெண்ன, ஓடிரு.. ” அவனை அடிக்க ஓடினேன். தெருவே எங்களை வித்தியாசமாக பார்த்தது. என் மிஷின் கொஞ்சம் கொஞ்சமாக எரிய அவன் கொஞ்ச கொஞ்சமாக மறைய ஆரம்பித்தான். முழு மிஷினும் எரிந்து முடித்தது. அவன் முழுதாக மறைந்துவிட்டான். சிலர் பயந்து போய் மயங்கியே விட்டார்கள். வாசலில் இருந்து இதையெல்லாம் பார்த்த அமாவும் பயந்துபோயிருந்தார். நான் வீட்டு வாசலுக்கு வந்தேன்.

“டேய் யார்ரா அந்த ஆளு? ஆராய்ச்சி அது இதுன்னு சொல்லி வேத்து கிரகவாசி யாரையும் கூட்டிட்டு வந்துட்டியா?”

“இல்லம்மா”

“பின்ன யாருடா அவரு?” ”அது நாந்தாம்மா” என்று சொல்லி அவரை இன்னும் பீதியடைய வைக்க விரும்பவில்லை. ஆனால் அம்மா என்னை ”அவர்” என்று மரியாதையாக கூப்பிட்டது இந்த ரணகளத்திலும் சந்தோசமாக இருந்தது.

“அதெல்லாம் விடுங்கம்மா. ட்ரெஸ் எடுத்து வைங்க. என் ஃப்ரெண்ட் ப்ரகாஷ் அவன் கம்பெனில ஒரு மார்க்கெட்டிங் வேல இருக்குன்னு சொன்னான், நான் கெளப்புறேன்” என்றேன். அம்மாவுக்கு ஒரே சந்தோஷம் தன் பிள்ளைக்கு இப்போவாவது வேலைக்கு போக வேண்டும் என்னும் அக்கரை வந்ததே என்று. துணி எடுத்து சென்னைக்கு கிளம்பி இதோ நான் வேலைக்கு வந்து கிட்டத்தட்ட 3மாதங்கள் ஆகிவிட்டன.

ஒரு நாள் மொட்டை மாடியில் நின்று கொண்டு எனது சென்னை காதலியிடம் ஃபோனில் பேச முயற்சித்துக்கொண்டிருந்தேன். சென்னை வந்தால் சீக்கிரம் லவ் செட் ஆகிவிடும் என்று நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன், இந்த மூன்று மாதத்திலேயே அதை உணர்ந்து கொண்டேன். ஆனால் என்னவென்று தெரியவில்லை, நான் எத்தனை முறை அழைத்தும் இன்று அவள் ஃபோனை எடுக்கவே இல்லை. ஒரு வழியாக 37 மிஸ்டு கால்களுக்கு பிறகு ஃபோனை எடுத்தாள். “எங்க வீட்ல எனக்கு மாப்ள பாத்துட்டாங்க, அவங்கள மீறி எதுவும் பண்ண முடியல, நம ஃப்ரெண்ட்ஸாவே இருப்போம்” என்று சொல்லி என் பதிலுக்கு கூட எதிர்பாராமல் ஃபோனை வைத்துவிட்டாள்.. ’பொண்ணுங்க தான் வீட்டிற்கு அடங்கிய எவ்வளவு பொறுப்பானவர்கள்!’ என்று வியந்து கொண்டே என் ஃபோனை கடாசினேன். வானில் சத்தத்தோடு ஒரு ஒளி வெள்ளம். என்னை நோக்கி, நான் எரித்தேனே அதே போல் ஒன்று வந்தது. அதே கிழவனான நான் வந்தேன். இறங்கி மெதுவாக என் அருகில் வந்து என் காதுக்குள் ரகசியம் போல் “எத்தன காதலி வந்தாலும் உனக்கு 60 வயசு வரைக்கும் கல்யாணம் ஆகாது” என்று சொல்லி கண்ணடித்து அசிங்கமாக சிரித்தது. அதனிடம் “என் வீட்டில் இறக்கி விட முடியுமா?” என்றி லிஃப்ட் கேட்டு கிளம்பினேன் 25வது முயற்சிக்கு. 24வது முயற்சி தோல்விக்கு இப்படி குறிப்பெடுத்துக்கொண்டேன், “No girl should be included at any cause"...

27 comments

  1. அருமை ராம்குமார். வாழ்த்துகள்.
    ஆந்திராவில் தெலுங்கு படம் பார்த்து வந்த தாக்கமா?
    இனிய நண்பர்களே, ஒரு வித்தியாசமான, அருமையான எழுத்தாளர் உருவாகிறார். Watch him, He is playing in all wickets, Congrats.
    எனது பக்கத்தில் இந்த அருமையான பதிவை பகிர்ந்திருக்கிறேன்; படித்துப் பார்த்து எங்கள் அருமை ராம்குமாரை உற்சாகப்படுத்துங்கள். மிக்க் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. //ஆந்திராவில் தெலுங்கு படம் பார்த்து வந்த தாக்கமா? // ஹா ஹா இல்லை இல்லை இரண்டு நாட்களுக்கு முன் நான் காலை உணவு சாப்பிட்ட போது எனக்கு எதிரில் அமர்ந்திருந்த ஒருவர் நான் ஆர்டர் செய்ததையே ஆர்டர் செய்து என்னை வேறு பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.. அதை அப்படியே பில்ட்-அப் பண்ணி தலைவர் பாணியில் ஒரு கதையை எழுதினேன்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்

      Delete
  2. dear friend ; best wishes to your expression and effort. But try to reduce the length of the story and words.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.Thanigai அவர்களே.. உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.. மதியம் வயிறு முட்ட ஃபுல் கட்டு கட்டுவது போல், கதையும் மொத்தமாக கொட்டுவது போல் எழுதினால் தான் எனக்கு திருப்தியாக இருக்கிறது.. ஆனாலும் நீளத்தை குறைக்க முயற்சி செய்கிறேன்.. டயட் உடம்புக்கு நல்லது, கதையின் நீளம் குறைவது வாசகர்களுக்கு நல்லது.. :-)

      Delete
  3. Anna Really nice Story congrats.......

    ReplyDelete
  4. தல சூப்பர் தல ... இதனை நாள் உங்க வலைபூ பக்கம் எப்புடி வரமா இருந்தேன்னு தெரியல... ரொம்ப அற்புதமான எழுத்து நடை... வரிக்கு வரி ஹாஸ்யம்... கலகுறீங்க தல... கொஞ்சம் பெரிய கதை ஆனா சலிக்காத நிறைவான கதை... சூப்பர் தல

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சீனு உங்கள் வாழ்த்துக்களுக்கு.. திருப்பூர் சந்திப்புக்கு தான் முதல் நன்றி உங்களைப்போல் நட்பை கொடுத்ததற்கு:-)

      Delete
  5. அருமையான கதை ..!பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி :-)

      Delete
  6. contains all the views :) great story :) keep it up.. we expect more

    ReplyDelete
  7. ஹா ஹா !! முடியலா!!!!

    ReplyDelete
  8. நன்றி Yuva..
    //ஹா ஹா !! முடியலா!!!!// என்ன Ramesh, இத நான் பாஸிடிவா எடுத்துக்கவா இல்ல நெகட்டிவா எடுத்துக்கவா?

    ReplyDelete
  9. எனக்கென்னவோ இன்னும் டைம் மெஷின் மேல இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கு.. யாராச்சும் ஒருத்தன் கண்டுபிடிச்சு காலத்தைத் தாண்டி போவான்னு..
    ”ஒரு எம்டி பூரி கொடுப்பா”

    ReplyDelete
    Replies
    1. ஹலோ பாஸ் அதான் அல்ரெடி நான் கண்டுபுடிச்சுட்டேனே? அதான் இப்போ வந்து இந்த கதையவே எழுதிருக்கேன்

      Delete
  10. நல்ல கதை... வாழ்த்துக்கள்... (From http://blogintamil.blogspot.in/2013/01/tamil-bloggers-2.html)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி திண்டுக்கல் தன்பாலன் அண்ணா.. :-)

      Delete
  11. சூப்பர்...

    ReplyDelete
  12. ராம்குமார்
    வலைச்சரம் மூலம் உங்கள் பதிவுக்கு வருகிறேன்.
    அறிவியல் புனைவுக் கதை- ஒரு நல்ல attempt .

    ஆனால் சில விஷயங்கள்...positive criticism ஆக எடுத்துக் கொள்ளவும்.
    நன்றி.

    பிக்சன் கதைகளில் மிக அதிக நகைச்சுவை தேவையற்றது. அங்கே இங்கே ஓரளவு நுழைக்கலாம். மற்றபடி எல்லாம் சரியே. டைம் மெஷின் destroy ஆனதும் கதாநாயகன் தன் முயற்சியை கை விட்டு விட்டு வேலைக்கு செல்கிறான். பிறகு எப்படி அந்தத் தாத்தா வந்தார் என்று தெரியவில்லை. காலப் பயணம் சாத்தியம் ஆகாததற்கு இந்த information
    loop ஒரு காரணம். அதாவது , நமக்கு இப்போது ரிலேடிவிடி தெரியும். அதை நாம் கடந்த காலத்துக்கு சென்று ஐன்ச்டீனுக்கெ சொல்லிக் கொடுப்பது. (அவர் தன் தியரியை கண்டுபிடிக்கும் முன்பே)...அப்படியானால் அது எங்கிருந்து வந்தது? தாத்தா எதிர்காலத்தில் இருந்து வருகிறார். அவர் கதாநாயகனுக்கு டைம் மெஷினின் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் உண்மையில் அந்த டைம் மெஷினின் தொழில் நுட்பம் யார் கண்டுபிடித்தது?

    காலவெளி வரைபடத்தில் (space time diagram ) வளையங்கள் (loops ) அனுமதி இல்லை.

    கடந்த காலத்துக்கு சென்றால் நம்மை நாமே சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில் நாம் எப்படி இருந்தோமோ அப்படித் தான் இருப்போம் என்று நினைக்கிறேன்....anyway , உங்கள் கதை சரிதான் என்று ஒப்புக் கொள்ளவும் முடியும்.
    கீழ்க்கண்ட விஷயங்களின் படி....வாழ்த்துக்கள்...

    1. கதாநாயகன் டைம் மெஷின் முயற்சியை விட்டு விட்டு வேலைக்கு செல்வதும், அல்லது கை விடாமல் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து மீண்டும் தன் கடந்த காலத்துக்கு செல்வதும் இரண்டும் சாத்தியம். பெயின்மேன் -இன் path of multiple histories என்பதன் படி இது சாத்தியம் தான். டைம் மெஷின் உடைந்ததும் தாத்தா மறைந்து விடுவதாக நீங்கள் கூறி இருப்பது சாலப் பொருந்துகிறது. நம்முடைய ஒருமித்த வாழ்க்கை sum over histories தான்.
    அதாவது எல்லா சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன அவை ஏனோ இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு ஒற்றை history ஆக converge ஆகின்றன.

    2. கடந்த காலத்துக்கு மீண்டு சென்று தன் காப்பியை பார்ப்பது என்பது குவாண்டம் விதிகளின் படி allowed .எலக்ட்ரான் கடந்த காலத்தில் பயணிக்கும் போது அது அதன் எதிர்த் துகளான பாசிட்ரான் ஆக மாறுகிறது. அது உண்மையின் அதே எலக்ட்ரான்...அது மீண்டும் காலத்தில் நேராக பயணித்து எலக்ட்ரான்-ஆக தோன்றலாம். அது மீண்டும் காலத்தில் பின்னோக்கிப் பயணித்து பாசிட்ரான் ஆகிறது. இப்போது நம்மிடம் நான்கு துகள்கள் இருந்தாலும் அவை உண்மையில் ஒன்று தான். kind of சங்கராச்சாரியாரின் அத்வைதம்!

    இதன் உச்ச கட்டமாக one electron universe என்ற ஒரு கொள்கை உள்ளது....பிரபஞ்சத்தில் ஒரே ஒரு எலக்ட்ரான் மட்டுமே இருக்கிறதாம். அது காலத்தில் முன்னும் பின்னும் இடையறாமல் பயணித்து வெவ்வேறு துகள்களாக , கார்பனாக, கமலாவாக, கந்த சாமியாக தோன்றுகிறதாம்..கோயில்களில் உற்சவரை அமர்த்தி முன்னும் பின்னும் ஆட்டுகிற ஊஞ்சல் உற்சவம் இதைக் குறிக்கலாம் என்கிறார்கள்.

    மேலும்...காரில் சென்று ஒளி வேகத்தை மிஞ்சுவது back to the future பழைய டெக்னிக்.
    :) வாசகர்களை குழப்ப, நம்ப வைக்க அங்கங்கே சில பயமுறுத்தும் technical terms உபயோகித்திருக்கலாம் நீங்கள்....மேலும் ஒளி வேகத்தை மிஞ்சினால் கடந்த காலம் வந்து விடும் என்பது ஒரு assumption தான். 3,2,1,0, -1,-2,-3 ..என்று சொல்வது போல. அதாவது, ஒரு செய்தி அது அனுப்பப்படும் முன்னரே போய் சேர்ந்து விட வேண்டும்..:>:>:>

    anyway, nice attempt...

    ReplyDelete
    Replies
    1. என் கதையை இவ்வளவு தூரம் அலசி ஆராய்ந்து மிக நுட்பமான கருத்துக்களை சொன்னதற்கு மிக்க நன்றி சமுத்ரா.. இனி கொஞ்சம் கேர்ஃபுல்லாத்தான் கதை எழுதணும் போல..

      Delete
  13. //. இனி கொஞ்சம் கேர்ஃபுல்லாத்தான் கதை எழுதணும் போல..//

    Of course.. :)

    ReplyDelete
  14. நகைச்சுவை கதையை அறிவியல் கலந்து எழுதி இருக்கறீர்கள் வாழ்த்துக்கள் ....! சுஜாதாவின் தாக்கம் அதிகம் தென்படுகிறது , என்ன அவருடையத்தில் தொழில்நுட்ப சமாச்சாரங்கள் அதிகம் தூவி இருப்பார் நீங்கள் நகைச்சுவையை பயன்படுத்தி இருக்குறீர்கள் ......! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அருமை அருமை..!

    ReplyDelete
  16. Bro நீங்க எழுதிய இந்த கதைய 2020 ல வெளிவந்த awe ங்கற படத்துல பயன்படுத்தி இருக்காங்க bro.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One